புதுடெல்லி,
நிழல் உலக தாதாவும் இந்தியாவில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடையவருமான தாவூத் இப்ராகிம் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவர் பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பதாக இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது.
ஆனால், இதை திட்டவட்டமாக மறுத்து வரும் பாகிஸ்தான், தீவிரவாதிகளுக்கு நாங்கள் ஒரு போதும் புகலிடம் அளிப்பது இல்லை என்று கூறிவருகிறது. ஆனால், பாகிஸ்தானின் இந்த கூற்றை பொய்யாக்கும் வகையில், தாவூத் இப்ராகீம் பாகிஸ்தானில் வசிப்பதற்கான முக்கிய ஆதாரம் ஒன்று வெளியாகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இதன் படி, தாவூத் இப்ராகீம் குடும்பத்துடன் பாகிஸ்தானின் கராச்சி நகர் அருகே வசிப்பது உறுதியாகி உள்ளது. தாவூத் இப்ராகீமின் சமீபத்திய படமும் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்துக்கான அவரது இல்ல தொலைபேசி கட்டணத்தை அவரது அவரது மனைவி பெயரில் கட்டப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. தாவூத் இப்ராகீம் மகள் மகரூக் , பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாவீத் மியாந்தத் மகனான ஜுனைத்தை திருமணம் செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.
நாளை இந்தியா- பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்டத்திலான பேச்சு வார்த்தை திட்டமிட்டபடி நடந்தால், தாவூத் இப்ராகீம் குறித்து கிடைத்துள்ள ஆவணங்களை இந்தியா, பாகிஸ்தானிடம் எழுப்பும் என தெரிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக