பிரேசில் அணியின் முன்னாள் கால்பந்து நட்சத்திர வீரர் ரொனால்டோ, சீனாவில் 30 கால்பந்து பள்ளிகளை திறக்கிறார். மேலும் கால்பந்தில் சீன இளைஞர்களை புதுவிதமான பயிற்சியின்ஹ் மூலம் உருவாக்க முயற்சி எடுப்பதாக அவர் தெரிவித்தார்.

சாவோ போலோவில் உள்ள கேம்பினாஸில் தனது கால்பந்து பள்ளியின் தொடக்க விழாவின் போது இத்தகவலை ரொனால்டோ தெரிவித்தார்.

"வணிக நோக்கம் தவிர, சீனாவில் கால்பந்து பள்ளிகளைத் தொடங்கக் காரணம், அங்கு கால்பந்துக்கு மிகப்பெரிய ரசிகர்கள் உள்ளனர், நிறைய வீரர்கள் விளையாடி வருகின்றனர். சீன அரசும், குடிமை அமைப்புகளும் கூட கால்பந்தை வளர்த்தெடுப்பதில் முனைப்பு காட்டி வருகின்றனர். என்னுடைய பயிற்சி முறை நிச்சயம் சீனாவை கால்பந்தில் ஒரு சக்தியாகத் திகழச்செய்யும் என்று நம்புகிறேன்.

சீன கால்பந்து அடித்தளம் பலமாக உள்ளது, உறுதிப்பாடும் உள்ளது, அங்கு இல்லாதது முறையான பயிற்சி மற்றும் கால்பந்து குறித்த கருத்தாக்கமாகும்.

ஜெர்மனியின் வீரர்கள் ஒப்பந்தச் சந்தை புள்ளிவிவரங்களின் படி, 2014-15-ல் சீனா சூப்பர் லீக் சாதனையான 108 மில்லியன் யூரோக்களை வீரர்களை ஒப்பந்தம் செய்ய செலவிட்டுள்ளது. 

சீன சூப்பர் லீக் 20 ஆண்டுகாலமே பழமை உடையது, ஆனால் வீரர்கள், பயிற்சியாளர்களுக்குச் செலவிடப்படும் தொகையில் இங்கிலிஷ் பிரிமியர் லீகிற்கு அடுத்த இடத்தில் சீன பிரிமியர் லீக் உள்ளது. கடந்த வாரம் சீன பிரிமியர் லீக் ஒலிபரப்பு உரிமைகள் 5 ஆண்டுகளுக்கு 8 பில்லியன் யுவான்களுக்கு விற்கப்பட்டுள்ளது. 

சீன அரசு தங்கள் அணி உலக அளவிலான தரநிலையை எட்டாதது குறித்து கவலையடைந்துள்ளது, இதுவரை 2002 உலகக் கோப்பைக்கு மட்டுமே சீன ஆடவர் கால்பந்து அணி தகுதி பெற்றுள்ளது. ஆனால் சீன மகளிர் கால்பந்து அணி 1999 உலகக் கோப்பையில் ரன்னர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போது ரொனால்டோ கால்பந்து அகாடமி மூலம் சீனாவின் கால்பந்து அணி உலகக் கோப்பை தரத்துக்கு உயரும் என்று ரொனால்டோ கால்பந்து அகாடமியின் தலைவர் கார்லோஸ் விஸார்ட் மார்டின்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.