கும்பகோணம் மகாமகத் திருவிழாவையொட்டி, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளதைத் தொடர்ந்து, இன்று வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவு போலீஸார் முழுவீச்சில் சோதனை மேற்கொண்டனர்.
கும்பகோணம் மகாமகக் குளக்கரையில் தாற்காலிகக் காவல் கட்டுப்பாட்டு அறைக்குக் குளத்தைச் சுற்றி 4 மனித வெடிகுண்டுகள் சுற்றி வருவதாகக் மர்மக் கடிதம் வந்தது.
இதைத்தொடர்ந்து, இன்று காலை முதல் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்புப் பிரிவு போலீஸார் சோதனையிட்டு வருகின்றனர். இந்தப் பணியில் சுமார் 150 போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
மகாமகக் குளத்தைச் சுற்றிலும் உள்ள மண்டபங்கள், கரையில் நிற்கும் வாகனங்கள், பொருள்களில் வெடிகுண்டு கண்டறியும் நவீன கருவிகள் மூலம் போலீஸார் சோதனையிட்டு வருகின்றனர்.
மேலும், மகாமகக் குளப் பகுதியில் இரு மோப்ப நாய்கள் மூலம் சோதனையிடப்பட்டு வருகிறது. இதேபோல, பேருந்து நிலையங்கள், ரயில் நிலையத்திலும் நவீன கருவிகள் மூலம் போலீஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, கடிதத்தில் உள்ள தகவல்கள், தடயங்கள் மூலம் அதை யார், எதற்காக அனுப்பினர் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக